2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தெற்கு வீதி இணைப்புக் கருத்திட்டம் - கடன் இலக்கம்: 3027 SRI - கடன் தொகையிலிருந்து நிதியிடப்படாத பகுதியையும் சேமிப்புகளையும் பயன்படுத்தி மேலதிக வீதிப் பகுதிகளையும் புனரமைத்தலும் விருத்தி செய்தலும் - தெற்கு அதிவேக பாதையின் 03 இடைமாறல் இடங்களுடன் தொடர்புபடும் 05 தேசிய நெடுஞ்சாலைகளை விருத்தி செய்வதற்கான தெற்கு வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் செலவினை ஏற்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 75 மில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையின் கீழ் எதிர்பார்க்கப்படும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் அண்ணளவாக 4,300 மில்லியன் ரூபா கொண்ட தொகை சேமிப்பாகுமென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, முறையான நடவடிக்கைகளை பின்பற்றி இவ்வாறு சேமிப்பாகும் கடன் தொகையை பயன்படுத்தி மேலதிக வீதி பகுதிகளை புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்குமாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |