2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உளநல சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் - நாட்டின் சனத்தொகை கட்டமைப்பு மற்றும் நோய்கள் பற்றிய தாக்கமானது மாறிவரும் செய்முறையில் உள்ளதுடன் அத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பொருட்டு சுகாதார பாதுகாப்பு வழங்கல் முறைமையை மீள்கட்டமைப்பு செய்யவேண்டியுள்ளது. தற்போது, இந்த நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதமானோர் ஏதேனுமொரு வகையான உள நோயினால் துன்புறுவதுடன் அவர்களில் 40 சதவீதமானோர் மாத்திரமே சிகிச்சையினை நாடுகின்றனர் என்பதும் உள நோயுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான போக்கினை கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்பட்டுள்ளதென்பதும் இனங்காணப்பட்டுள்ளது. இவ்விடயங்களை கருத்திற் கொண்டு, ஆரோக்கியமான சனத்தொகையினரை உருவாக்கும் நோக்குடன் உளநல சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கண்டி போதனா வைத்தியசாலையில் புதிய உளவியல் சிகிச்சை அலகு கட்டடத் தொகுதியை 503 மில்லியன் ரூபா முதலீட்டைக் கொண்டும் சிலாபம் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உளவியல் சிகிச்சை அலகை 213.8 மில்லியன் ரூபா முதலீட்டைக் கொண்டும் நிர்மாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |