2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கூட்டுறவு துறையினை ஒழுங்குறுத்துவதற்கு சட்டமொன்றை வரைதல் - தற்போது நாடுமுழுவதும் 2,269 கூட்டுறவு கிராமிய வங்கிகளும் 17 கூட்டுறவு கிராமிய வங்கிச் சங்கங்களும் 8,004 நிதிச்சேவை கூட்டுறவுச் சங்கங்களும் இயங்குகின்றன. அதேபோன்று கூட்டுறவு கிராமிய வங்கி முறைமையூடாக 115 பில்லியன் ரூபாவைக் கொண்ட அங்கத்தவர் மற்றும் அங்கத்தவர் சாராத வைப்புகள் திரட்டப்பட்டுள்ளதோடு, சுமார் 59.8 பில்லியன் ரூபாவைக் கொண்ட தொகை மொத்த கடன்களாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக ஏனைய நிதிச் சேவைகள் கூட்டுறவுச் சங்கங்களினால் சுமார் 104 பில்லியன் ரூபா வைப்புகள் திரட்டப்பட்டுள்ளதோடு, சுமார் 95 பில்லியன் ரூபாவைக் கொண்ட தொகை மொத்த கடன்களாக வழங்கப் பட்டுள்ளன. கூட்டுறவு தொழில்முயற்சியானது மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிதி ரீதியில் பலமாக இருந்தாலும் சில நிதிச் சேவை கூட்டுறவுச் சங்கங்களின் சீரற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக மூலதன நட்டங்களுக்கு முகங்கொடுக்க நேர்துள்ளதெனவும் நிதி பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாகியுள்ளதெனவும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், கூட்டுறவு நிதித்துறை முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் கூட்டுறவு கிராமிய வங்கி உட்பட ஏனைய நிதி சேவை கூட்டுறவுச் சங்கங்களின் ஒழுங்குறுத்துகை, மேற்பார்வை, மேம்படுத்தல் மற்றும் அனுமதிப்பத்திரம் வழங்குதல் என்பன சம்பந்தமான சட்ட ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு சட்டமொன்றை வரைவதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |