2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குடாவிலச்சிய குளத்தையும் தெமட்டகல குளத்தையும் புனரமைத்தல் - மஹவிலச்சிய பிரதேச மக்களின் குடிநீர், வீட்டு மற்றும் விவசாய நோக்கங்களுக்கான நீர்த் தேவையினை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு நீர்வழங்கலை அதிகரித்துக் கொள்வதற்கு வில்பத்து தேசிய பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள தற்போது கைவிடப்பட்ட குடாவிலச்சிய குளத்தை புனரமைப்புச் செய்வதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, மஹவிலச்சிய பிரதேசத்தின் 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 25,000 மக்கள் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை பயிர்ச்செய்கையின் கீழ் கொண்டுவரப்படக்கூடிய 320 ஹெக்டெயர் விஸ்தீரணம் கொண்ட காணிக்கு நீர்ப்பாசன நீர்வழங்கலை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. வில்பத்து தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் காணப்படும் வனசீவராசிகளுக்கு நீரினை வழங்குவதற்கும் நீருக்காக அலைந்து திரியும் யானைகள் வனப் பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்படுவதற்கும் இது உதவுமென்பதுடன் அதன்மூலம் மனித-யானை மோதல் குறைவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. நீர் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்ளும் பலாகல பிரதேசத்தைச் சுற்றியுள்ள மக்களின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு தற்போது கைவிடப்பட்ட தெமட்டகல குளத்தை புனரமைப்பதற்கும் அப்பிரதேசத்தில் காணப்படும் கிட்டத்தட்ட 32 கிராமிய குளங்களுக்கு மேலதிக நீரை வழங்கும் பொருட்டு ஹெவன்எல்ல ஓயாவைச் சுற்றி நீர்வழங்கும் கால்வாய் ஒன்றையும் அணைக்கட்டு ஒன்றையும் நிர்மாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக, நீர்ப்பாசன நீரானது அண்ணளவாக 520 ஹெக்டெயர் விஸ்தீரணம் கொண்ட பயிர்ச்செய்கை காணிக்கு வழங்கப்படுமென்பதுடன் கிட்டத்தட்ட 1,250 விவசாயக் குடும்பத்தினர் நன்மைகளைப் பெற்றுக் கொள்வர். கஹல்ல வனத்தைச் சுற்றி நிர்மாணிக்கப்படும் பிரேரிக்கப்பட்ட கால்வாய்க்கூடாக கோடை காலத்தில் வனசீவராசிகளுக்கும் நீர் கிடைப்பதற்கு வழியேற்படும். அதற்கிணங்க, குடாவிலச்சிய குளத்தை 1,000 மில்லியன் ரூபா முதலீட்டைக் கொண்டு 03 வருட காலப்பகுதிக்குள் புனரமைக்கும் பொருட்டும் அத்துடன் 924 மில்லியன் ரூபா முதலீட்டைக் கொண்டு இரு (02) கட்டங்களின் கீழ் தெமட்டகல குளத்தின் புனரமைப்பையும் ஹெவனல்ல அணைக்கட்டினதும் நீர்வழங்கும் கால்வாயினதும் மேம்படுத்தலையும் மேற்கொள்ளும் பொருட்டும் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|