2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல் - சில வைத்தியசாலைகளில் உள்ள மருத்துவ உபகரணங்களில் பெரும்பாலானவை பத்து வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்தவையாகவும் பயன்படுத்த இயலாதவையாகவும் அவற்றின் ஆயுட்காலம் முடிவுற்ற நிலையிலும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று சில வைத்திசாலைகளில் அன்றாட செயற்பாட்டிற்கு அத்தியாவசியமான மேலதிய மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை நிலவுகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுகாதார பாதுகாப்புக்கான கொரிய மன்றத்தின் பிரநிதிகள் புதிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான கருத்திட்டமொன்று சம்பந்தமாக சாத்தியத்தகவாய்வொன்றினை மேற்கொண்டுள்ளதோடு, 17 தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளிலுள்ள பயன்படுத்தமுடியாததும் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதுமான மருத்துவ உபகரணங்களுக்கு பதிலாக புதிய மருத்துவ உபகரணங்களை வழங்கும் பொருட்டிலான கருத்திட்டமொன்றுக்கு சலுகை கடன் திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதற்கு கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த மன்றத்தினால் வழங்கப்படும் 80 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியின் கீ்ழ் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |