2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேருவலை, காலி, புராணவெல்ல அல்லது குடாவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் - இலங்கையில் 20 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளபோதிலும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை தவிர ஏனைய எவற்றிலும் 55 அடி நீளம் கொண்ட அல்லது அதைவிட கூடுதலான நீளம்கொண்ட மீன்பிடிப் படகுகளை நங்கூரமிடுவதற்குத் தேவையான போதுமான வசதிகளை கொண்டிருக்க வில்லையென்பது அவதானிக்கப்பட்டுள்ளது. தேசிய நீரகவளமூல ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், பிடிக்கப்பட்ட மீன்களை கரைக்கு கொண்டு வருவதற்கான முறையான வசதிகள், மீன்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதற்கு போதுமான வசதிகள் மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் சிறிய படகுகளில் முறையான களஞ்சிய வசதிகள் என்பன இல்லாமை காரணமாக மீன்பிடிக்குப் பின்னர் கருத்திற் கொள்ளத்தக்க நட்டம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், மீன்பிடிக்குப் பின்னரான நட்டத்தைக் குறைப்பதற்கும் மீன்பிடியின் தர அம்சத்தை விருத்தி செய்வதற்கும் போதுமான வசதிகளை வழங்கவேண்டியுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்வதற்கான பசுமைத் துறைமுக கோட்பாட்டின் கீழ் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவகத்தின் நன்கொடை நிதியங்களைக் கொண்டு பேருவலை, காலி, புராணவெல்ல அல்லது குடாவெல்ல ஆகிய பிரதேசங்களில் மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இத்துறைமுகங்களின் அபிவிருத்திக்காக சுற்றாடல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியை தேசிய நீரகவளமூல ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையினால் செய்விக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |