• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து முறைமையினைத் தாபிப்பதற்கான கருத்திட்டம்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் நிலவும் கடும் வாகன நெரிசலை குறைப்பதற்காக கொழும்பு நகரத்தினுள் இலகு ரயில் போக்குவரத்து முறைமையினைத் தாபிப்பதற்காக யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் நிதி மற்றும் தொழினுட்ப உதவியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலகு ரயில் போக்குவரத்து முறைமையின் ஊடாக பிரதான நிருவாக கேந்திர நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் கொழும்புக்கு அண்மையில் அமைந்துள்ள சன நெரிசல் கொண்ட வதிவிட பிரதேசம் என்பவற்றை ஒன்றுடனொன்று இணைக்கும் விதத்தில் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த இலகு ரயில் போக்குவரத்து முறைமையானது அதிவேக பாதை வலையமைப்பிற்கும் பல்வகை போக்குவரத்து நிலையங்களிற்கும் இலகுவாக சென்றடைவதற்கு இயலுமாகும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து மாலம்பே டிப்போ வரை 16 புகையிரத நிலையங்களையும் 17 கிலோ மீற்றர் தூரத்தையும் கொண்ட இலகு ரயில் போக்குவரத்து முறைமையினை 246,641 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட முதலீட்டில் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு செலவு செய்யப்படவுள்ள தொகையில் 200,415 மில்லியன் யப்பான் யென்களை வழங்குவதற்கு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனமானது உடன்பட்டுள்ளதோடு, அதற்கான கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.