2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூர்த்தி பயனாளிகள் வசிக்கும் பின்தங்கிய கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் - பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் சமூர்த்தி பயனாளிகளை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பலவேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட அவர்களுடைய உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு போதுமான வசதிகள் இல்லாமை, பயிர்செய்கை நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கிடைப்பதில் நிலவும் வரையறை, விற்பனை வசதிக்குத் தேவையான இடங்கள் இல்லாமை, தொழினுட்ப வசதிகளை பெற்றுக் கொள்வதற்கும் உற்பத்திகளின் தரத்தை விருத்தி செய்வதற்குமான சேவை நிலையங்கள் இல்லாமை, உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானவாறு இல்லாமை போன்ற காரணங்களினால் இந்த நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள இயலாமல் போயுள்ளமை தெரியவருகின்றது.
இந்த நிலைமைக்கு மாற்று வழியாக வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாட்டு பிரதேசங்கள் போன்று அநுராதபுரம், பொலன்நறுவை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற வறுமைநிலை உயர் மட்டத்திலுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமங்களில் இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |