2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவை "1990 சுவசெரிய மன்றம்" - கட்டம் II ஐ நடைமுறைப்படுத்துதல் - ஏற்கனவே "1990 சுவசெரிய" அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையானது பாராளுமன்ற சட்டெமான்றின் மூலம் தாபிப்பதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேல் மற்றும் தென் மாகாணங்களில் மாத்திரம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள இந்த பிணியாளர் வண்டி மருத்துவ சேவையின் இரண்டாவது கட்டத்தின் கீழ் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரி்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இதன் பொருட்டு 15.02 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, "1990 சுவசெரிய மன்றம்" தாபிக்கப்படும்வரை இந்த பிணியாளர் வண்டி மருத்துவ சேவையின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதான வரிச் செலவுகளை தனது அமைச்சினால் ஏற்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|