2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஒருங்கிணைவாக பேரூந்துக் கட்டணங்களைத் திருத்துதல் - 2018‑05‑11 ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஒருங்கிணைவாக பேரூந்துக் கட்டணங்களைத் திருத்துமாறு பேரூந்து சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணத்தை 10/- ரூபாவாக இருக்கும் விதத்திலும் ஏனைய பேரூந்து கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிக்கும் பொருட்டும் 2018‑05‑15 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆயினும் இந்த பேரூந்து கட்டணங்களின் அதிகரிப்பு போதுமானதாக இல்லையென பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டது. வருடாந்த பேரூந்த கட்டண திருத்தத்திற்கு அடிப்படையாக கொள்ளப்படும் சூத்திரத்தில் சில பெறுமதி ஏற்றத்தாழ்வுகளை தற்போதைக்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டுமென்பதுவும் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சரினாலும் நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சரினாலும் பேரூந்து சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டது. இதன் போது காணப்பட்ட உடன்பாட்டிற்கு அமைவாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் மீண்டும் பேரூந்து கட்டணங்களை திருத்தாமல் இருக்கும் நிபந்தனைக்கு உட்பட்டு, 2018 மே மாதம் 22 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 10/- ரூபாவைக் கொண்ட ஆகக் குறைந்த பேரூந்து கட்டணத்தை 12/- ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஏனைய பேரூந்து கட்டணங்களை 12.5 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |