2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'யாவருக்கும் புகலிடம்' மற்றும் 'கிராம சக்தி' மாதிரிக் கிராமங்களுக்கு காணிகளை குறித்தொதுக்குதல் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரை சமூக பொருளாதார ரீதியில் பலப்படுத்துகையில் அடிப்படைத் தேவையொன்றான அவர்களுடைய வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக 'யாவருக்கும் புகலிடம்' மற்றும் 'கிராம சக்தி' மாதிரிக் கிராம நிகழ்ச்சித்திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டளவில் 2,500 மாதிரிக் கிராமங்களை நிருமாணிக்கும் இலக்கினை வெற்றிக் கொள்வதற்காக ஆண்டொன்றில் சுமார் 650 மாதிரிக் கிராமங்கள் நிருமாணிக்கப்படுதல் வேண்டும். இந்த நோக்கம் கருதி, நாடளாவிய ரீதியில் காணிகளை குறித்தொதுக்குதல் துரிதமாக செய்யப்பட வேண்டியுள்ளது. ஆதலால், வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் செயலாளரினதும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரினதும் இணைத் தலைமைத்துவத்தின் கீழும் உரிய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியும் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |