2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாதிரி கிராமங்களை மையமாக் கொண்டு வாழ்வாதார வழிமுறைகளை அபிவிருத்தி செய்தல் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குடியிருப்பதற்கு தமக்கென்று வீடொன்றில்லாத அத்துடன் வீடொன்றை நிருமாணித்துக் கொள்வதற்கு பொருத்தமான காணித் துண்டொன்று இல்லாத குறைந்த வருமானம் பெரும் வறிய மக்களுக்கு அரசாங்கத்தினால் காணியொன்றையும் வீடொன்றை நிருமாணித்துக் கொள்வதற்காக ஐந்து இலட்சம் ரூபா என்னும் உச்சம் வரை கடன் வசதிகளையும் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 596 மாதிரி கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இவற்றில் 54 மாதிரி கிராமங்கள் ஏற்கனவே பயனாளிகளுக்கு உரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தை நிலைபேறான அடிப்படையில் முன்னோக்கி கொண்டு வருகையில் வீடுகளை வழங்குவதற்கு மேலதிகமாக அவர்களுடைய வாழ்வாதாரம் உட்பட வருமான வழிகளை கட்டியெழுப்புவது அத்தியாவசியமானதாகும். ஆதலால், வீட்டுத் தோட்டம், சிறிய அளவிலான கால்நடை வளர்ப்பு, குடிசை கைத்தொழில் மற்றும் சுயதொழில் போன்ற வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை இந்த மாதிரி கிராமங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |