2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல் பற்றிய நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துதல் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் செயற்படும் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல் பற்றிய நிறுவனம் (Institute of Forensic Medicine and Toxicology - IFMT) பிரேத பரிசோதனைகளை நடாத்துவதில் விசேட பணியினை நிறைவேற்றுகின்றது. இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளின் தரத்தினை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு மரணத்தின் பின்னரான ஆய்வு சார்ந்த பணிகளை தரப்படுத்துதல், மையப்படுத்துதல் மற்றும் மருத்துவம் சாராத பதவியினரை பயிற்றுவித்தல் மூலம் மரணத்தின் பின்னரான ஆய்வு செயற்பாடுகளை விருத்தி செய்தல் என்பன சார்பில் சருவதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கையிலுள்ள சருவதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கை கடிதமொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |