2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உத்தேச தொழினுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதியங்களைப் பெற்றுக்கொள்ளுதல் இலங்கையில் தொழினுட்பங்கள் மற்றும் திறன்களை வளர்ச்சியுறச் செய்வதற்கான மாறிவரும் கேள்வியினை சமாளிக்கும் பொருட்டு இந்த நாட்டில் தொழிற்படையினைத் தரமுயர்த்துவதற்கான தேவை அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், வாழ்க்கைத்தொழில் திறன்களை மையப்படுத்தி, கிட்டிய கடந்த காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைக்கு கருத்திற் கொள்ளத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில், தொழினுட்ப பாடப் பிரிவானது 2013 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த. (உ/த) சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஆசிரியர்களின் செய்முறைச் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கை அவசியப்படும் விதத்தில் எடுக்கப்பட வேண்டும். இந்நோக்கம் கருதி, 60.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் செலவில் உத்தேச தொழினுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியமானது இக்கருத்திட்டத்தின் அமுலாக்கம் கருதி 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட கடன் வசதியொன்றை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளதுடன் 10.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட மீதி தொகையானது இலங்கை அரசாங்கத்தினால் தாங்கப்படும். அதற்கிணங்க, 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட கடனொன்றைப் பெற்றுக் கொள்வதற்கென சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |