2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கண்டி நகர பிரதேசத்தில் வீதி நெரிசலைக் குறைப்பதற்கு தீர்வாக கண்டி துணை நகர புகையிரத வீதிகளின் அபிவிருத்தி - கண்டி மாவட்டத்தின் சனத்தொகை சுமார் 1.4 மில்லியனாவதோடு, இதில் சுமார் 150,000 பேர்கள் கண்டி நகர பிரதேசத்தில் குடியிருப்பவர்களாவர். கண்டி நகரத்திற்குள் நாளொன்றில் 55,000 வாகனங்கள் உள்வருவதோடு, இதற்காகவுள்ள 03 பிரதான நுழைவு பாதைகள் தற்போதைய அத்துடன் எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாததோடு, கடும் நகரமயமாக்கல் காரணமாக இந்த வீதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இடவசதியும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் நிலவும் கடும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு கண்டி மற்றும் அதற்கண்மித்த புகையிரத பாதைகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பின்வரும் புகையிரதப் பாதைகளின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற நிறுவனங்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதென போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது: *. ரம்புக்கனையிலிருந்து கடுகண்ணாவை வரை பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தினை அதிகரித்தல்; *. கடுகண்ணாவையிலிருந்து கட்டுகஸ்தொட்ட வரை அல்லது வல்லேகங்ம (மாத்தளை வீதி) வரை இரட்டைப் பாதைகளை நிருமாணித்தல்; *. கட்டுக்கஸ்தொட்டையிலிருந்து மாத்தளை வரையிலான புகையிரத பாதையை புனரமைத்தல்; *. பேராதனை சந்தியிலிருந்து கம்பளை வரையிலான புகையிரத அதிகரித்தல். |