2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு மேலதிக நிதியிடல் - களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிருமாணிப்புப் பணிகள் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2018 திசெம்பர் மாதமளவில் இந்த நிருமாணிப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நீர்த்தேக்க அணைக்கட்டின் அத்திவாரத்தில் முன்னர் இனங்காணப்படாத புவியியல் நிலைமைகள் மற்றும் இதற்கமைவாக செய்யப்பட்ட திருத்தங்கள் காரணமாக ஒப்பந்த செலவு 50.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலுவை தொகையிலிருந்து 16 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட பகுதியினை தழுவும் பொருட்டு மேலதிக கடன் தொகையொன்றை வழங்குவதற்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |