2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்திற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேசிய பொதுக் கொள்கை கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல் - இலங்கையில் அரசாங்க துறையிலுள்ள உத்தியோகத்தர்களின் திறன் விருத்திக்கான பொறுப்பினை வகிக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்திற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேசிய பொதுக் கொள்கை கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடு வதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல், நிபுணத்துவம், மாணவர்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் ஆகியவற்றின் பரிமாற்றம், முகாமைத்துவ மதியுரைச் செயற்பாடுகள் மற்றும் ஒன்றிணைந்த ஆராய்ச்சி செயற்பாடுகள் போன்ற துறைகளை இப்புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளடக்கும். ஆதலால், அரச துறையின் திறன் விருத்தியின் ஊடாக அரச சேவையை கூடுதல் வினைத் திறனாக்கும் குறிக்கோளுடன் பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |