2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இழப்பீடு செலுத்தும் அலுவலகம் - மனித உரிமைகள் அல்லது மனிதநேய சட்டங்கள் கடுமையாக மீறப்பட்ட பின்வரும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் அமைச்சரவையினால் காலத்திற்கு காலம் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைத் தீர்மானங்களுக்கு அமைவாக இழப்பீடு செலுத்தும் சுயாதீன நிறுவனமொன்று இருக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. i. கடந்த காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்த மோதல் அல்லது அதன் விளைவாக பின்னர் நிகழ்ந்துள்ள சம்பவங்கள். ii. அரசியல் பிரச்சினைகள் அல்லது மக்கள் கலவரம். iii. இலங்கையர்களின், குழுக்களின் அல்லது இனங்களின் உரிமைகளை திட்டமிட்டு மீறுதல். iv. "பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாப்பது தொடர்பிலான சருவதேச சமவாயத்தில்" பொருள் கோரப்பட்டுள்ளவாறு காணாமல் ஆக்கப்படுதல். இதற்கமைவாக, இத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மோதல்களின் போது அவற்றுக்கு ஆளான கிராமங்களைச் சேர்ந்த கிராம வாசிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை குடும்பங்கள் உட்பட இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்த சகல இலங்கையர்களுக்கும் இழப்பீட்டிற்கான கோரிக்கை முன்வைக்கக் கூடிய "இழப்பீடு செலுத்தும் அலுவலகமொன்றை" சட்டத்தின் ஊடாக தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்டமூலமொன்றை வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |