2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் - 2018 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு சிறந்த வசதியினை ஏற்பாடு செய்யும் விதத்திலும் அவர்களினால் கற்கப்படும் பாடநெறிகளுக்கு பொருத்தமானவாறும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, இந்த நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பின்வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளுக்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக நூலகம் மற்றும் தகவல் தொழினுட்ப நிலையத்துக்கான மூன்று (03) மாடிக் கட்டடங்கள் இரண்டினை நிருமாணித்தல். * றுகுணு பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்திற்கு மூன்று (03) மாடி விரிவுரை மண்டப கட்டடமொன்றை நிருமாணித்தல். * அநுராதபுரம் இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தின் பதவியணியினருக்கான உத்தியோகபூர்வ வீடுகளை நிருமாணித்தல். * களணி பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த பட்டப்பின் படிப்பு நிறுவனம் சார்பில் நான்கு (04) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல். |