2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதான சட்டங்களை திருத்துதல் - காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்குரிய மூன்று பிரதான சட்டங்களான மாநகர சபை கட்டளைச் சட்டம், நகரசபை கட்டளைச் சட்டம், பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளினால் காலத்திற்குக் காலம் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களையும் 1999 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற கூட்டத்தொடர் அறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய ஆணைக்குழுவின் சிபாரிசுகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தேவையான திருத்தங்களை முன்மொழிவதற்காக சனாதிபதி சட்டத்தரணி ஒருவரின் தலைமையிலான குழுவொன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மிக சிறந்த பொதுமக்கள் நலன் பொருட்டான சனநாயக நிருவாக முறையொன்றை உள்ளூராட்சி நிறுவனங்களில் உறுதி செய்வதற்கு இந்தக் குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி, உரிய சட்டங்களைத் திருத்துவதற்கான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |