2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆயுள்வேத மருத்துவ சபையின் பணிகளை முறைப்படுத்துவதற்காக புதிய உள்நாட்டு மருத்துவ சபைச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் - 3,000 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த ஆயுள்வேத மருத்துவ முறையானது இலங்கை பாரம்பரிய மருத்துவ முறையுடன் சேர்த்து நாட்டின் மருத்துவ துறையில் கணிசமான பணியினை மேற்கொள்வதோடு, இதற்கு ஒருங்கிணைவாக சித்த மருத்துவ முறையும் யுனானி மருத்துவ முறையும் உற்நாட்டு மருத்துவ முறையினுள் செயற்படுத்தப்படுகின்றன. 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள ஆயுள்வேத மருத்துவ சபையினால் தற்போது உள்நாட்டு மருத்துவ முறையினுள் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பதிவு செய்தல், ஒழுங்குறுத்துதல் மற்றும் அவர்களுடைய ஒழுக்கநெறி சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போது உள்நாட்டு மருத்துவ முறை இலங்கையர்களுக்கிடையிலும் அதே போன்று வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கிடையிலும் பிரபல்யமாக உள்ளதோடு, காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு ஆயுள்வேத மருத்துவசபையின் பணிகளை விரிவு படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக உள்நாட்டு மருத்துவ முறையின் மேம்பாட்டுக்காக 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்திலிருந்து 'ஆயுள்வேத மருத்துசபை' என்னும் பகுதியை வேறுபடுத்தி ஆயுள்வேத மருத்துவசபையின் பணிகளை முறைப்படுத்துவதற்காக புதிய உள்நாட்டு மருத்துவ சபைச் சட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |