2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்வதற்காக பிரிஸ்டல் நார்களை இறக்குமதி செய்தல் - நாட்டிலிருந்து தெங்கு சார்ந்த உற்பத்தியொன்றான பிரிஸ்டல் நார் மெற்றிக்தொன் 8,000 இற்கும் 15,000 இற்கும் இடைப்பட்ட அளவு சுமார் 20 நாடுகளுக்கு வருடாந்தம் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, இதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணி ஈட்டப்படுகின்றது. துடைப்பங்கள், தும்புத்தடி, பாய்கள் போன்ற முடிவுப் பொருட்களாக பெறுமதி சேர்க்கப்பட்டு பிரிஸ்டல் நார் ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியுமாக இருந்தாலும், பிரிஸ்டல் நார் உள்நாட்டில் பெற்றுக் கொள்வதில் நிலவும் கஷ்டம் காரணமாக இதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால், உள்நாட்டு தெங்கு அறுவடை பழைய நிலைக்கு வரும்வரை கடும் தாவர தொற்றுத் தடைக்காப்பு சட்டங்களுக்கு உட்பட்டும், தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபாரிசுகளுக்கும் அதேபோன்று உரிய நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்வதற்கு மூலப் பொருள் வடிவத்தில் இந்தியாவிலிருந்து பிரிஸ்டல் நார் இறக்குமதி செய்யும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |