• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க கடன்பெறல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி முறிகளை வழங்குதல்
- 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு அமைவாக 2018 ஆம் ஆண்டு சார்பில் மதிப்பிடப்பட்ட உச்ச அரசாங்க கடன்பெறல் எல்லை 1,893 பில்லியன் ரூபாவாகும். இதில் 1,150 பில்லியன் ரூபா மீளக் கடன்களைச் செலுத்துவதற்காகவும் 743 பில்லியன் ரூபா அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உட்பட ஏனைய செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த 1,893 பில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் தொகையிலிருந்து 1,313 பில்லியன் ரூபாவானது உள்நாட்டு கடன்களிலிருந்தும் 580 பில்லியன் ரூபாவானது வௌிநாட்டுக் கடன்களிலிருந்தும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு மூலவளங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் கடன் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் பெறப்படவுள்ளன.

இதற்கமைவாக, 2018 ஆம் ஆண்டினுள் இலங்கை அபிவிருத்தி முறிகளை வழங்குவதன் மூலம் 3,000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 456 பில்லியன் ரூபா) பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இந்த முறிகளின் வழங்குகைகளை மேற்கொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.