2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலக்கீழ் நீரை நிலைபேறாக முகாமித்தல் - சனத்தொகை அதிகரித்துள்ளதன் காரணமாக மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் இலங்கையில் நிலக்கீழ் நீர் பாவனை துரிதமாக அதிகரித்துள்ளது. வீட்டுப்பாவனை தவிர கமத்தொழில், நீர் போத்தலில் அடைத்தல், சுற்றுலா ஹோட்டல்கள், வாகனங்களை சேவை செய்யும் இடங்கள், பல்வேறுபட்ட கைத்தொழில்கள் போன்றவற்றிற்கு பாரிய அளவில் நிலக்கீழ் நீர் பயன்படுத்தப்படுகின்றது. நிலக்கீழ் நீர் அதிக அளவில் பயன்படுத்துகின்றமை பல்வேறுபட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைகின்றமையினால் குழாய் கிணறுகள் துளையிடும் இயந்திர உரிமையாளர்கள் நீர்வழங்கல் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிலக்கீழ் நீர் பெற்றுக் கொள்வது ஒழுங்குறுத்துகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது குழாய்க் கிணறுகளை நிருமாணிக்கும் கைத்தொழிலாளர்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையானது 2017-03-16 ஆம் திகதியிடப்பட்டதும் 2010/23 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளின் மூலம் விதித்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயலாற்றாத குழாய் கிணறுகள் நிருமாணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலாளர்களுக்கு நீர் வழங்கல் சபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் விதிக்கப்படும் தண்டத்தொகையை அதிகரிப்பதற்கும் குழாய்க்கிணறுகள் துளையிடும் இயந்திரங்களுக்கு வருடாந்த பதிவுக் கட்டணமொன்றை அறிவிடுவதன் மூலம் குழாய்க்கிணறு துளையிடுபவர்களின் தரமொன்றை உருவாக்குவதற்குமாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |