2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
"1990 சுவசெரிய" அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல் - இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவை இற்றைவரை வெற்றிகரமாக செயற்படுகின்றதோடு, இந்த சேவையை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு "1990 சுவசெரிய மன்றத்தினை" பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலதிகமாக 209 பிணியாளர் வண்டிகளை ஈடுபடுத்தி இந்த பிணியாளர் வண்டி சேவையை ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு மேலதிக கொடையொன்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக "1990 சுவசெரிய மன்றம்" தாபிக்கப்படும் வரை இந்த பிணியாளர் வண்டி சேவையை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு GVK EMRI Lanka (Private) Limited கம்பனிக்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலத்தை நீடிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |