2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொற்றா நோய்கள் தொடர்புபட்ட சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த கூட்டத்திற்கு அனுசரணை வழங்குதல் - சார்க் வலயத்திலுள்ள சகல நாடுகளும் தொற்றாத நோய்கள் தொடர்புபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக உள்ள வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடுவதற்கும் இது தொடர்பில் ஒவ்வொரு நாடுகளினதும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறைகளை விருத்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கும் தொற்றாத நோய்கள் பற்றிய சார்க் நாடுகளின் வருடாந்த மாநாடொன்று நடாத்தப்பட வேண்டுமென சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் சந்திப்பில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை 2017 திசெம்பர் மாதம் 09 ஆம் 10 ஆம் திகதிகளில் இலங்கையில் கொழும்பில் நடாத்துவதற்கான அனுசரணையை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |