2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான கட்டமைப்பொன்றைத் தயாரித்தல் - நிலைபேறுடைய காணி முகாமைத்துவம் தொடர்பிலான கருத்திட்டத்தின் கீழ் நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக தயாரிக்கப்பட்ட தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கைக்கும் இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டங்களை ஆக்குவதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. சட்டத்தின் மூலம் அமுல்படுத்தக்கூடிய விதத்தில் தாபிக்கப்பட்ட தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கையொன்று இல்லாதது அண்மைக் காலத்தில் நாட்டில் வௌ்ளப்பெருக்கு மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு தாக்கத்தைச் செலுத்திய பிரதான காரணியாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேற்குறிப்பிடப்பட்ட தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு தேவையான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |