2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகையை மேம்படுத்துதல் - அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கு முக்கியமாக நீர்ப்பாசன துறையின் பாரிய கட்டமைப்புக்குத் தேவையான உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவது அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணியாகும். நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ வான்கதவுகள், தொழிற்பாட்டு முறைமைகள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் இந்த திணைக்களத்தின் வார்ப்பக வேலைக்களத்தின் வினைத்திறனையும் உற்பத்தி ஆற்றலையும் விருத்தி செய்யும் நோக்கில் மேற்புறமாக பொருத்தப்படும் நவீன பாரந்தூக்கியொன்றை (8 தொன்) இந்த திணைக்களத்துக்காக கொள்வனவு செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த திணைக்களத்தின் நிறுவன செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கு நிறுவன வளத்திட்டமிடல் மென்பொருள் முறைமை யொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது, இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதியினை ஒதுக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |