2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் கடன்வழி கருத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துதல் - இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மேம்படுத்தும் நோக்குடன் கடன்வழி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியங்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இந்தக் கடன்திட்டத்திற்கான அதிகரித்த கேள்வியினைக் கருத்திற் கொண்டு, உத்தேச கருத்திட்ட காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னர், இந்நிதியங்களை முழுமையாகப் பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு சலுகைக்கடன்களை வழங்குதல் சாத்தியமாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, உத்தேச கடன்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையான பயனாளிகளுக்கு சலுகைக்கடன்களை வழங்குவதற்கு ஏதுவாக 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட மேலதிக நிதியமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |