2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல் - பெருந்தோட்டங்களில் லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு உறுதிகளுடனான வீட்டு வசதிகளை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட வீடமைப்புக் கருத்திட்டங்களின் மூலம் உரிய பயனாளிகளுக்கு இந்த ஆண்டு முடிவடையும் போது வீடுகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, "ஹரித்த ரண்" வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்டுவரும் 2,551 வீடுகள், 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்புக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தில் 1,134 வீடுகள் உட்பட 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் மீரியபெத்த வீடமைப்பு கருத்திட்டத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள 75 வீடுகள் என்பன சார்பில் உரித்து உறுதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உரித்து உறுதிகளை வழங்குவதற்கு குறித்த வீடமைப்பு கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள காணித் துண்டுகளை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளிடமிருந்து விடுவித்துக் கொள்ளும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |