2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொது சந்தைத் தொகுதிகளை மீள் அபிவிருத்தி செய்தல் - மேல்மாகாணத்தின் பிரதான நகரங்களில் நகர மத்தியில் அமைந்துள்ள பெருமளவு காணியை பயன்படுத்தி பல தசாப்தங்களுக்கு முன்னர் நிருமாணிக்கப்பட்டுள்ள பொது சந்தை தொகுதிகளில் பெரும்பாலானவை அபிவிருத்தி காணாது சேதமுற்ற நிலையில் காணப்படுகின்றமை தெரியவருகின்றது. உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் நிருவகிக்கப்படும் இந்த சந்தை தொகுதிகள் வர்த்தக ரீதியிலான இடவசதிகளை வழங்குவதற்கு தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மீள் அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொள்ளுபிட்டிய, பம்பலபிட்டிய, பொரளை, நுகேகொடை, மஹரகமை, தெஹிவளை, கல்கிஸ்சை, மொறட்டுவை, கட்டுபெத்த ஆகிய நகரங்களில் அமைந்துள்ள பொது சந்தைத் தொகுதிகளை நவீன மற்றும் சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையும் உரிய உள்ளூராட்சி அதிகாரசபைகளும் இணைந்து முறையான வழிமுறையொன்றின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |