2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான 100 மெகாவொட் மேலதிக மின்சாரத்தினைக் கொள்வனவு செய்தல் - கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் பருவ காலங்களின் போது எதிர்பார்க்கப்பட்ட மழை குறைவடைந்ததன் காரணமாக, நீர்மின் நிலையங்களுடன் இணைந்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்து போயுள்ளது. இச்சூழமைவில், 2017 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலிருந்து அடுத்த 06 மாத காலப்பகுதிக்கு 100 மெகாவொட் மேலதிக மின்சார வழங்கலை தேசிய மின்சார வலையமைப்பிற்குள் சேர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறுங்கால கொள்வனவு உடன்படிக்கையொன்றுக்கூடாக சர்வதேச போட்டி விலைமனுக்களைக் கோரி, குத்தகை அடிப்படையில் மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கென பொருத்தமான வழங்குனர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |