2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவை மற்றும் "1990 சுவசெரிய மன்றத்தினைத்" தாபித்தல் - தற்போது மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் வெற்றிகரமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள "1990 சுவசரிய" முன்வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவசேவையை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக GVK EMRI Lanka (Pvt) Ltd., நிறுவனத்திற்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலம் 2017‑12‑31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்த பிணியாளர் வண்டி மருத்துவ சேவையை இலங்கையின் சகல மாகாணங்களையும் தழுவும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த பிணியாளர் வண்டி சேவையின் தொழிற்பாட்டு மற்றும் நிருவாக பணிகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான உரிமையைக் கொண்ட "1990 சுவசரிய மன்றம்" என்னும் மன்றமொன்றை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |