2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2017-2021 - அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் திட்டவட்டமான வழிகாட்டல்களுக்கு அமைவாக "மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2017-2021" தயாரிக்கும் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டமானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, இதனை செயற்படுத்தும் முன்னேற்றம் தொடர்பில் காலத்துக்கு காலம் அறிக்கையிடும் நோக்கத்திற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் இதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு அமைச்சர்களுக்கிடையிலான கூட்டமொன்றை கூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்கூட கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |