2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சொகுசு, பகுதி சொகுசு மற்றும் பகுதி சொகுசு இரட்டை பணி வாகனங்கள் சார்பில் நிலுவை வரியை அறவிடுதல் - 1995 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க நிதிச் சட்டத்திற்கு அமைவாக "சொகுசு வாகனங்கள்" (2500 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் டீசல் மோட்டார் கார்கள் மற்றும் 2000 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் பெற்றோல் மோட்டார் கார்கள்), "பகுதி சொகுசு வாகனங்கள்" (2201 தொடக்கம் 2500 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் டீசல் மோட்டார் கார்கள் மற்றும் 2200 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் ஜீப் வண்டிகள், 1801 தொடக்கம் 2000 சிலிண்டர் கொள்ளளவை கொண்ட பெற்றோல் கார்கள் மற்றும் 1800 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் பெ்றோல் ஜீப் வண்டிகள்), “பகுதி சொகுசு இரட்டை பணி வாகனங்கள்" (2200 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் டீசல் கெப் வண்டிகள் மற்றும் 1800 சிலிண்டர் கொள்ளளவை விஞ்சும் பெற்றோல் கெப் வண்டிகள்) உரிமையாளர்களினால் குறித்த வகுதிகளுக்குரிய வாகனங்களை முதற் தடவையாக பதிவு செய்யும் திகதியிலிருந்து 07 வருடங்கள் வரை முன்னோக்கி வருடாந்தம் வரித் தொகை செலுத்தப்படுதல் வேண்டும். இதன் முதல் வரித் தவணையானது வாகனம் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் அறவிடப்படுவதோடு, மீதித் தவணைகள் இந்த திணைக்களத்துக்கோ அல்லது காப்புறுதி நிறுவனமொன்றுக்கோ செலுத்தலாம். இவ்வாறு வரி செலுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் நிலுவை வரித் தொகைக்காக 50 சதவீதம் கொண்ட தண்டப்பணமொன்று அறவிடப்படும். இதுவரை சேர்ந்துள்ள முழு நிலுவை வரித் தொகையானது 350 மில்லியன் ரூபாவை விஞ்சியுள்ளது.
இவ்வாறு வரி தொகையானது செலுத்தப்படுவதில் காணப்படும் கால தாமதமானது வாகன உரிமையாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயமொன்று காரணமாய் உள்ளதென்பதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, "சொகுசு”, "பகுதி சொகுசு" மற்றும் "பகுதி சொகுசு இரட்டை பணி" வாகனங்கள் சார்பில் அறிவிடப்பட வேண்டிய நிலுவை வரித்தொகையை அறவிடும் பொருட்டு 2017 செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 2017 நொவெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலான மூன்று (03) மாதங்களைக் கொண்ட சலுகைக் காலமொன்றை வழங்குவதற்கும் இந்த சலுகைக் காலப்பகுதியினுள் உரிய நிலுவை வரித்தொகையை செலுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு உரிய தண்டப் பணத்திலிருந்து 5 சதவீதம் மாத்திரம் அறவிடுவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |