2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மலைநாட்டு மரபுரிமைகளைப் பாதுகாத்தல் - மலைநாட்டு மரபுரிமைகளின் கேந்திர நிலையங்களான மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அழிந்துபோகும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பாதுகாப்பதும் அத்துடன் மலைநாட்டு பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கிய சிறிய குளங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனங்களை புனரமைப்பதும், மலைநாட்டு பராம்பரிய நடனங்கள், உலோக கைத்தொழில், லாக்ஷா கைத்தொழில், பிரம்பு, ஓலை, புல் போன்ற கைப்பணிகளையும் கொண்ட மக்கள் கலை மற்றும் கைப்பணி முறைகளை பாதுகாப்பதும் மிக அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, மலைநாட்டு பாரம்பரிய கிராமங்களை அபிவிருத்தி செய்தல், பழைமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை புனரமைத்தல், கைப்பணி மேம்பாடு, கிராமிய குளங்கள் மற்றும் நீர்பாசனங்களை புனரமைத்தல், அரும்பொருட் காட்சியங்கள் மற்றும் கலாசார நிலையங்களை நிருமாணித்தல் அடங்கலாக பல்வேறுபட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கையாள்வதற்காக "மலைநாட்டு மரபுரிமைகளைப் பாதுகாக்கும் அதிகாரசபை" என்னும் நியதிச்சட்ட சபையொன்றை பாராளுமன்ற சட்டமொன்றினால் தாபிக்கும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |