2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - கிராமிய சமூகத்திற்கும் முக்கிய சமூக பொருளாதார நிலையங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பினை கட்டியெழுப்பும் நோக்கில் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டமானது தெற்கு, மத்திய, சப்பிரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலும் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் இரண்டாவது கட்டமானது வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேற்கு ஆகிய மாகாணங்களில் கிராமிய நுழைவுப்பாதைகள் சுமார் 3,400 கிலோ மீற்றர்களும் தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் 340 கிலோ மீற்றர்களும் புனரமைக்கப்பட்டு சிறந்த நிலையில் பராமரித்து செல்லும் குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக, இந்த இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணக்கப் பேச்சுகளை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |