2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையொன்றைத் தாபித்தல் - இலங்கை அரசாங்கத்தினால் GVK EMRI LANKA (Pvt) Ltd. நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையொன்றை மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் தாபித்து ஒருவருட (01) காலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்தும் கருத்திட்டமொன்று 2016 யூலை மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் 88 பிணியாளர் வண்டிகள் முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, 2017 ஏப்ரல் மாத இறுதியளவில் அவசர முன் செயற்பட்டு நிலையத்தினால் 236,000 தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12.52 விநாடிகளைக் கொண்ட சராசரி செயற்பாட்டு காலத்தில் நாளொன்றுக்கு 130-135 இடைப்பட்ட நோயாளிகள் இதனூடாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இந்த கருத்திட்டத்தின் வெற்றியினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |