• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்துகம நகரத்தில் தமிழ் மொழிமூல இரண்டாம்நிலை பாடசாலை யொன்றை ஆரம்பித்தல்
- களுத்துறை மாவட்டத்தின், மத்துகம கல்வி வலயத்தில் தமிழ் மொழிமூலம் கல்வி கற்பிக்கப்படும் தோட்ட மற்றும் ஏனைய பாடசாலைகள் 18 உள்ளதோடு இந்த சகல பாடசாலைகளும் முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் வரை மாத்திரம் வகுப்புகள் நடாத்தப்படும் ஆரம்ப பாடசாலைகள் ஆகும். இந்த வலயத்தில் தமிழ் மொழிமூலம் உயர்தர கல்விக்கு ஏற்ற பாடசாலை ஒன்று இல்லாததோடு, பெரும்பாலும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு களுத்துறை அல்லது ஹொரண கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு செல்லவேண்டி நேர்ந்துள்ளது. அதேபோன்று விஞ்ஞான அல்லது கணித பாடங்களில் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டாயமாக பேருவளை அல்லது தர்காநகர் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. ஆதலால் மத்துகம நகரத்திற்கு அண்மையில் தமிழ் மொழிமூல இரண்டாம்நிலை பாடசாலை யொன்றை ஆரம்பிப்பது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினாலும் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு கல்வி அமைச்சினதும் மேல்மாகாண கல்வி அமைச்சினதும் ஒத்துழைப்புடன் மத்துகம நகரத்திற்கு அண்மையில் தமிழ் மொழிமூல இரண்டாம்நிலை பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் இதற்காக நமுனுகுல பெருந்தோட்ட கம்பனியினால் நிருவகிக்கப்படும் மத்துகம வத்தை என்னும் காணியிலிருந்து சுமார் 05 ஏக்கர் காணியை ஒதுக்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.