2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2017 ஏப்ரல் மாத இறுதியில் பெறுகை கண்காணிப்பின் செயலாற்றுகை - அரசாங்க பெறுகை செயற்பாட்டின் வினைத்திறனை உயர்த்தும் நோக்கில் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் செயற்பாட்டு அலுவலகத்தின் ஒருபகுதியாக பெறுகை கண்காணிப்பு பிரிவானது 2016 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. அதன் கண்காணிப்பு அறிக்கைக்கு அமைவாக 2017 ஏப்ரல் மாத இறுதியில் 219 பெறுகைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தோடு, 32 பெறுகைகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த 219 பெறுகைகளில் 151 உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு ஆகிய ஐந்து (05) அமைச்சுக்களுக்கும் உரியவையாகும். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, கொள்வனவு செயற்பாட்டின் தாமதத்திற்கு தாக்கத்தை செலுத்தியுள்ள காரணங்களும் வினைத்திறனை மேம்படுத்தும் பொருட்டு இந்த அறிக்கையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டன. |