2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்புபட்ட கலந்துரையாடல் - எமது நாட்டு ஏற்றுமதிகளுக்கு வௌிநாட்டு சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முக்கிய துறைகளுக்கான வௌிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்கும் உள்ள சிறந்த வழி சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்வதாகும். பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு இலங்கை ஏற்கனவே கலந்துரையாடி வருகின்றது. இதற்கமைவாக, இந்தியாவுடன் 04 சுற்று கலந்துரையாடல்களையும் சீனாவுடன் 06 சுற்று கலந்துரையாடல்களையும் சிங்கப்பூருடன் 05 சுற்று கலந்துரையாடல்களையும் இதுவரை நடாத்தியுள்ளதோடு, இந்த ஆண்டின் இறுதியில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ளது. பொருள் வர்த்தகம், சேவைகள் வர்த்தகம், முதலீடு, சுகாதாரப் பாதுகாப்பும் தாவரப் பொருட்களுக்குரிய பாதுகாப்பு முறைகளும், சுங்க நடவடிக்கைகள், வர்த்தக இலகுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசாங்க துறைசார்ந்த பெறுகை நடவடிக்கைகள் (சிங்கப்பூருடனான கலந்துரையாடல்களுக்கு உரியதாக) ஆகிய துறைகளை தழுவும் விதத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குரியதாக சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான கலந்துரையாடல்களில் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |