2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாவட்டங்களில் தரைக்கீழ் நீர் கண்காணிப்பு வலயமைப்பொன்றைத் தாபிப்பதற்கான முன்னோடிக் கருத்திட்டம் - தரைக்கீழ் நீர் பாவனையின் கணிசமான அளவு அதிகரிப்பின் விளைவாக, இலங்கையில் நீர்வளங்கள் அருகி வருவதையும் மாசடைதலையும் விளைவிப்பதற்குள்ள சந்தர்ப்பங்கள் காரணமாக தரைக்கீழ் நீரின் முறையான முகாமைத்துவம் அத்தியாவசியமாக மாறியுள்ளது. இந்நோக்கத்திற்காக, தரைக்கீழ் நீர்மட்டத்தின் தரம் மற்றும் அளவு தொடர்பில் உரியகால தரவுகளை கொண்டிருப்பது அத்தியாவசியமானது என்பதுடன் இது குறித்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் பயனுறுதி வாய்ந்த தரைக்கீழ் நீர் கண்காணிப்பு வலையமைப்பு ஒன்றை தாபித்தல் சார்பில் முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. இம்முன்னோடிக் கருத்திட்டத்தின் கீழ், தரைக்கீழ் நீரின் மாசடைவு காரணமாக நீண்டகால சிறுநீரக நோய் பரவும் இடங்களான அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் மொனராகலை ஆகிய தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி மூன்று ஆற்றுப்படுகைகளில் தரைக்கீழ் நீர் கண்காணிப்பு முறைமையொன்று தாபிக்கப்படும். இக்கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 20.36 மில்லியன் யூரோ ஆகுமென்பதுடன் நெதர்லாந்தின் ரெபோ வங்கியானது (Rabo Bank) மொத்த மதிப்பிடப்பட்ட தொகையின் 85 சதவீதத்தினை வழங்குவதற்கு அதன் விருப்பத்தினை வௌிப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க மேற்போந்த கடன்தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கென நெதர்லாந்தின் ரெபோ வங்கியுடன் உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |