2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மை அலுவலகத்தை தாபிப்பது தொடர்பாக இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - மானியங்கள் மற்றும் கடன்களுக்கு ஊடாக நிதியுதவியினை வழங்கி 4 கண்டங்களின் 60 இற்கு மேலான நாடுகளுக்கு உதவிபுரியும் பிரான்ஸ் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி உதவிக் கொள்கையின் அமுலாக்கம் சார்பில் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மை தாபிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் இலங்கையின் பிரான்ஸ் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட, கொழும்பிலுள்ள அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மையின் அலுவலகமொன்றின் தாபிப்புடன், நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாடு, ஒன்றிணைந்த நகர அபிவிருத்தி, கடற்றொழில், உயிர்பல்வகைத்தன்மை, பசுமைவலுசக்தி அபிவிருத்தி, காடாக்கம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகள் போன்ற சில முன்னுரிமை வாய்ந்த அபிவிருத்திக் கருத்திட்டங்களானவை மேற்போந்த முகவராண்மையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதியங்களின் மூலம் இலங்கையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க இரு நாடுகளுக்கிடையிலும் இருதரப்பு உறவினை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கையில் புதிய அலுவலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டும் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மைக்கு சிறப்புரிமை அந்தஸ்த்தினை வழங்கும் பொருட்டும் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை யொன்றினை கைச்சாத்திடுவதற்கென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |