2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராணுவ வீரர்களின் குடும்பங்கள் சார்பில் “விரு சுமித்துரு" வீடமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - இராணுவ செயற்பாட்டின் போது மரணித்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின், பொலிஸ் உத்தியோகத்தர்களின் சிவில் பாதுகாப்பு படையணி வீரர்களின் குடும்பங்கள் சார்பில் நிலவும் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 4 வருட காலப்பகுதிக்குள் 3,650 வீட்டு அலகுகளை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்றை “விரு சுமித்துரு" என்னும் பெயரில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தக் கருத் திட்டத்தின் கீழ் 1,950 வீட்டு அலகுகளை புதிதாக நிருமாணிப்பதற்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு சொந்தமான பகுதியளவு நிருமாணிக்கப்பட்டுள்ள 1,700 வீட்டு அலகுகளின் வேலைகளை பூர்த்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப் படுகின்றதோடு, உரிய பயனாளிகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் இனங் காணப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் புதிய வீடொன்றுக்காக 1.2 மில்லியன் ரூபாவும் பகுதியளவு பூர்த்தி செய்யப்பட்ட வீடொன்றுக்காக 500,000/= ரூபா பெறுமதிமிக்க கட்டடப்பொருட்களை வழங்குவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, தேவையான ஆள்வலுவானது இராணுவத்தினராலும் பொலிசாரினாலும் வழங்கப்படும். இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தை 2017 - 2020 காலப் பகுதிக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் ரணவிரு சேவா அதிகாரசபையும் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|