2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்காசியாவின் கலாசார கேந்திர நிலையமொன்றாக கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்தல் - சுற்றாடல் மற்றும் கலாசாரத்தின் நிலைபேறுடைய தன்மையை நீண்டகாலமாக பாதுகாத்து சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாட்டின் சுற்றுலாத் தொழிலானது கடந்த காலப்பகுதியில் துரித வளர்ச்சியினை காட்டுகின்றதோடு 2016 ஆம் ஆண்டில் 2 மில்லியனுக்கு கூடுதலான வௌிநாட்டவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்கள். நாட்டிற்கான உல்லாசப் பயணங்களின் நோக்கங்களுக்கு அமைவாக வகுப்பீடு செய்யும் போது உல்லாசப் பயணிகளில் சுமார் 70 சதவீதமானோர் உல்லாச பயண நோக்கத்திற்காக வருகை தந்துள்ளதோடு, மேலும் 25 சதவீதமானோர் தங்களுடைய நண்பர்களை அல்லது உறவினர்களை சந்திப்பதற்கு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். எமது நாட்டிற்கே உரியதான மதிப்பு மிக்க கலாசார விழுமியங்கள், கைப்பணிகள், நடனம், சமையற் கலை மற்றும் விழாக்கள் போன்ற துறைகளில் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு பாரிய தேவை இருந்த போதிலும் மதம் மற்றும் கலாசார நோக்கங்களை முன்னிருத்தி நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் அளவு 1 சத வீதத்திற்கும் குறைவானதாகும். இதற்கமைவாக, உள்நாட்டு கலை மற்றும் கலாசார அங்கங்களை வௌிப்படுத்துவதற்கு வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் சருவதேச கலைகளையும் கலாசாரங்களையும் மேம்படுத்தும் தெற்காசிய நாட்டிய மற்றும் கண்காட்சி கேந்திர நிலையமாக கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு உரிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |