2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹிங்குரக்கொடையில் தேசிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல் - பொலன்நறுவை மாவட்டத்தில் வருடாந்தம் சுமார் 3,225 மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதோடு, அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்கு இந்த மாவட்டத்தில் தற்போதுள்ள அரசாங்க துறைசார்ந்த பயிற்சி நிலையங்களின் இயலளவு போதுமானதாகவில்லை. இந்த இளைஞர்களுக்கு பயனுள்ள தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் தரம்மிக்க தொழினுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சியினை வழங்குவதற்காக பொலன்நறுவை கூட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக தேசிய தொழிற்பயிற்சி நிலைய மொன்றை நெதர்லாந்து அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் ஹிங்குரக்கொடையில் தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |