2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்காவொன்றைத் தாபித்தல் - உலகில் வளர்ச்சியடைந்து வரும் தொழினுட்பத்திற்குள் வரும் "உயிரியல் தொழினுட்பம்" சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் தொழில்களை நாட்டினுள் மேம்படுத்த வேண்டுமென தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ் இனங்காணப்பட்டுள்ளதோடு, “உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்காவினைத்" தாபிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்திலுள்ள நனோ தொழினுட்ப மற்றும் விஞ்ஞான பூங்காவினுள் அரசாங்க - தனியார் பங்களிப்புடன் உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்காவொன்றை தாபிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |