2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்து சமுத்திர சுற்றுவலய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல் - இந்து சமுத்திர வலயத்தில் அமைந்துள்ள நாடுகளின் நிலையான அத்துடன் சமமான அபிவிருத்தியினை நோக்ககாகக் கொண்டு இயங்கும் இந்து சமுத்திர சுற்றுவலய அமைப்பின் 20 ஆம் ஆண்டு விழாவிற்கு ஒருங்கிணைவாக இதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் மாநாடொன்று 2017 மார்ச் 07 ஆம் திகதியன்று இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரத்தில் நடைபெறவுள்ளது. இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான மற்றும் சௌபாக்கியமிக்க வலய மொன்றாக மாற்றுவதற்கு சமுத்திரம் சார்ந்த ஒத்துழைப்பினை பலப்படுத்துதல் என்னும் தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்படும் இந்த மாநாட்டிற்கு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொள்ளவுள்ளார். இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் செய்துகொள்ளப்படவுள்ள உடன்பாட்டு ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடும் பொருட்டு பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |