2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மகாவலி நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய சக்தி உற்பத்தி நிலையங்களை தாபித்தல் - அனல்மின் உற்பத்தியை குறைத்து புதுப்பிக்கத்தக்க வலுசக்தி போக்கின்பால் செல்லும் நடவடிக்கையொன்றாக மகாவலி பொருளாதார வலயங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்களை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அதன் முதலாவது கட்டமாக மாதுருஓயா நீர்த்தேக்கத்தின் மொத்த பிரதேசத்தின் 4 சதவீதத்திற்கும் குறைந்த அதாவது சுமார் 500 ஏக்கரை பயன்படுத்தி 100 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையமொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக சருவதேச போட்டி பிரேரிப்புகளை கோரும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினாலும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |