2017-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐரோப்பிய யூனியனின் பொது வரவுசெலவுத்திட்டத்திலிருந்து நிதியளிக்கப்படும் கருத்திட்டங்களுக்கு தரப்பு நாடுகளினால் விதிக்கப்படும் வரி மற்றும் சுங்க அறவீடுகளுக்கான கட்டமைப்பு உடன்படிக்கை - ஐரோப்பிய யூனியனினால் இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கு 220 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதிவாய்ந்த நிதி உதவியும் இதற்கு மேலதிகமாக பாரிய அளவில் மனிதநேய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. 2014-2020 காலப்பகுதியின் சார்பில் 210 மில்லியன் யூரோ (சுமார் 34 பில்லியன் ரூபா) நிதியுதவி வழங்குவதற்கும் ஐரோப்பிய யூனியன் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இந்த தொகையிலிருந்து 72 மில்லியன் யூரோ ஏற்கனவே 03 கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஐரோப்பிய யூனியனினால் வழங்கப்படும் நிதியுதவி உரிய அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரி, சுங்கத்தீர்வை உட்பட பிற நிதி வரி கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்த முடியாது. இதற்கமைவாக ஐரோப்பிய யூனியனின் பொது வரவுசெலவுத்திட்டத்திலிருந்து நிதியளிக்கப்படும் கருத்திட்டங்கள் சம்பந்தமாக இலங்கையினால் ஏற்புடைத்தாக்கிக் கொள்ளப்படும் வரி மற்றும் சுங்க அறவீடுகள் தொடர்பில் கட்டமைப்பு உடன்படிக்கையினை ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |